ஆப்நகரம்

பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கு போட்டு தற்கொலை?

பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ கார்த்திக் மன அழுத்தத்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 May 2020, 8:42 am
1960கள், 70களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் வாணிஸ்ரீ. அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடித்த வசந்த மாளிகை படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களில் நடித்து வந்த வாணிஸ்ரீ டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
Samayam Tamil abhinaya venkatesha karthik


அவருக்கு அபிநய வெங்கடேஷ கார்த்திக்(36) என்கிற மகனும், அனுபமா என்கிற மகளும் உள்ளனர். கார்த்திக் சென்னையில் உள்ள அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

அபிநய வெங்கடேஷ கார்த்திக்கின் மனைவியும் ஒரு டாக்டர். கார்த்திக்கின் மனைவி சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கியுள்ளார். அவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான கார்த்திக்கின் மனைவி அண்மையில் தான் குழந்தை பெற்றுள்ளார்.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் பெங்களூரில் இருந்து கிளம்பி வந்த கார்த்திக்கால் நுங்கம்பாக்கத்திற்கு செல்ல முடியவில்லையாம். இதையடுத்து அவர் தன் அப்பா கருணாகரன் தங்கியிருக்கும் திருக்கழுக்குன்றம் பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.

லாக்டவுனால் மனைவி, குழந்தைகளை பார்க்க முடியாமல் கார்த்திக் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தூங்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் கார்த்திக் பண்ணை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார்த்திக்கின் உடல் சென்னையில் இருக்கும் வாணிஸ்ரீயின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.

கார்த்திக் மன அழுத்தத்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், சொத்து தகராறால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இருவிதமாக பேசப்படுகிறது. சொத்துக்களை பிரிப்பதில் அபிநய வெங்கடேஷ கார்த்திக் மற்றும் அவரது சகோதரியான டாக்டர் அனுபமா ஆகியோர் இடையே சில காலமாகவே பிரச்சனையாக இருந்ததாம்.

சொத்து விஷயத்தில் அப்பா கருணாகரனும், மகன் அபிநய வெங்கடேஷ கார்த்திக்கும் ஒரு பக்கம் என்றும், அம்மா வாணிஸ்ரீயும், மகள் அனுபமாவும் ஒரு பக்கம் என்றும் கூறப்படுகிறது. ஒரு டாக்டர் இப்படி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக கார்த்திக் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று தகவல் வெளியானபோது பலருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் டாக்டர் சேதுராமன் நினைவு வந்தது. இது என்ன சோதனை, இப்படி டாக்டர்கள் எல்லாம் இளம் வயதில் மாரடைப்பால் இறக்கிறார்களே என்று மக்கள் வியந்தனர்.

இந்நிலையில் தான் கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 71 வயதாகும் வாணிஸ்ரீ பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு தான் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்