ஆப்நகரம்

சிம்புவை பத்தி ஏன் தான் தப்பா பேசுறாங்களோ, அவர் அப்படிப்பட்டவர் இல்லை: வெங்கட் பிரபு

சிம்பு மற்றவர்கள் சொல்வது போன்று இல்லாமல் சரியான நேரத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Jul 2020, 12:23 pm
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். மாநாடு படப்பிடிப்பு முன் கூட்டியே துவங்க வேண்டியது. ஆனால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் வரை சென்று பஞ்சாயத்து நடத்தப்பட்டது.
Samayam Tamil simbu


தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் கலந்து கொண்டு தன் மகன் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து நடித்துக் கொடுப்பார் என்று வாக்குறுதி அளித்தார். அதன் பிறகே மாநாடு படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

மாநாடு படத்தின் பூஜையின்போதும், படப்பிடிப்பு நடந்தபோதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. மாநாடு படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் மாநாடு படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் சிம்பு பற்றி கூறியிருப்பதாவது,

எனக்கு சிம்புவை சிறு வயதில் இருந்தே தெரியும். எனக்கு அவர் நெருக்கமானவர், எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்று. சென்னை 28 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின்போது வந்த சரோஜா சாமானிகாலோ பாடலை வைக்க சிம்பு தான் பரிந்துரை செய்தார்.

மேலும் சென்னை 28 படத்தை மதுரை பகுதியில் விற்க உதவி செய்ததும் சிம்பு தான். எனக்கு சிம்புவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று பல காலமாக ஆசை. ஆனால் அது மாநாடு மூலம் தான் நிறைவேறியிருக்கிறது.

பலரும் சிம்புவை பற்றி பல மாதிரி பேசினாலும் அவரை வைத்து படம் எடுப்பதில் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. சிம்பு ஞாயிற்றுக்கிழமைகளிலும், இரவு நேரத்திலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் சிம்பு ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மறுநாள் வரை நடித்துக் கொடுத்தார்.

சிம்புவை பற்றி வெளியே பேசப்படுவது வியப்பாக இருக்கிறது. நிஜத்தில் அவர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதுடன், முழு ஒத்துழைப்பும் அளிக்கிறார் என்றார்.

முன்னதாக சிம்பு படப்பிடிப்புக்கு வர மறுத்ததால் தான் மாநாடு ஷூட்டிங் திட்டமிட்டபடி துவங்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் சிம்பு மீது எந்த தவறும் இல்லை, அவர் சரியான நேரத்திற்கு வந்து நடிக்கிறார் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியதாவது,

மங்காத்தா படத்திற்கு பிறகு விஜய் என்னை தன் வீட்டிற்கு டின்னருக்கு அழைத்தார். டின்னருக்கு சென்ற இடத்தில் நாங்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம். தனக்கு ஒரு ஸ்க்ரிப்ட் தயாரிக்குமாறு விஜய் என்னிடம் கூறினார். நல்ல ஸ்க்ரிப்ட்டுடன் அவரை இம்பிரஸ் செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அவரை வைத்து வித்தியாசமான படத்தை இயக்க காத்திருக்கிறேன் என்றார்.

விஜய், அஜித்தை வைத்து மங்காத்தா 2 படத்தை வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. மங்காத்தா 2 படத்தை இயக்குமாறு ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் ஆண்டுக் கணக்கில் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் வெங்கட் பிரபு விஜய்யை இயக்க தயாராகி வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்