ஆப்நகரம்

நவம்பரில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்?

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Jun 2020, 1:10 pm
நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு திருமணம் எப்பொழுது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் என்ன போஸ்ட் போட்டாலும் தலைவி நயன்தாராவை எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று தான் ரசிகர்கள் கேட்கிறார்கள்.
Samayam Tamil nayanthara


இந்நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் என்கிற தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது. கொரோனா லாக்டவுன் வந்ததில் இருந்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றி ஏதாவது ஒரு வதந்தி பரவிக் கொண்டே இருக்கிறது.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று தான் வதந்தி பரவியது. இது குறித்து அறிந்த நயன்தாராவின் செய்தித் தொடர்பாளரோ எல்லாம் பொய் என்றார். மேலும் விக்னேஷ் சிவன் தான் நயன்தாராவுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவர்களுக்கு திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் கோவிலில் வைத்து திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது. பிரமாண்டமாக நடத்த விருப்பம் இல்லாததால் கோவிலில் இரு வீட்டார், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை இருவருமே உறுதி செய்யவில்லை.

நயன்தாராவின் திருமணம் பற்றி வதந்தி பரவுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. அடிக்கடி அவர் கல்யாணப் பேச்சாகத் தான் இருக்கிறது. அதற்கும் முன்பு நயன்தாரா தன் முன்னாள் காதலரான பிரபுதேவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் என்று வதந்தி பரவியது.

லாக்டவுனில் நயன்தாரா சமத்தா வீட்டில் இருக்கிறார். ஆனால் அவரை பற்றி அவ்வப்போது ஏதாவது வதந்தி பரவிக் கொண்டே இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் இலவச விளம்பரம் தானே என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் சமந்தாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். சமந்தாவுக்கு பதில் யார் நடிக்கப் போகிறார் என்பதை விக்னேஷ் சிவன் இதுவரை தெரிவிக்கவில்லை. நானும் ரௌடி தான் கூட்டணி மீண்டும் சேர்ந்திருப்பதால் காத்து வாக்குல ரெண்டு காதல் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே விக்னேஷ் சிவன் நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வருகிறார். அந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா பிரச்சனை ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்