ஆப்நகரம்

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் 'அண்ணாத்தே சேதி' வெளியானது

துக்ளக் தர்பார் படத்தின் முதல் பாடல் அண்ணாத்த சேதி தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

Samayam Tamil 3 Aug 2020, 6:27 pm
நடிகர் விஜய் சேதுபதி அடுத்து நடித்துள்ள அரசியல் படம் துக்ளக் தர்பார். இந்த படம் பல இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் முதலில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு சில புகைப்படங்கள் தான். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி ஒரு டேபிளுக்கு முன் அமர்ந்திருப்பது போலவும் அதில் அவரது தோற்றம் ஒருவிதமாகவும் டேபிள் கண்ணாடியில் தெரியும் உருவம் வேறொரு கெட்டப்பிலும் இருந்தது.
Samayam Tamil Vijay Sethupathi


அதற்குப் பிறகு இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. அதில் விஜய் சேதுபதி மற்றும் ஆர் பார்த்திபன் இருவரும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை என அரசியல்வாதி கெட்டப்பில் இருந்தனர். இதனால் இது முழுக்க முழுக்க அரசியல் படமாகத் தான் இருக்கும் என்பது உறுதி ஆனது. டெல்லிபிரசாத் தீனதயாளன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பவராக விஜய் சேதுபதி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை குறிப்பிடும் வகையிலேயே தற்போது ஒரு புதிய பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்ணாத்த சேதி தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

96 படத்தில் மெலோடியான பல பாடல்கள் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த கோவிந்த் வசந்தா தான் இந்த பாடலை இசையமைத்து இருக்கிறார். இந்த பாடல் முழுவதும் ராப் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல ராப் பாடகர் அறிவு இந்த பாடலை பாடி இருக்கிறார். அவர் இதற்கு முன்பு மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி ரெய்டு என்ற பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதிக்காக இந்த பாடலை அவர் பாடி இருக்கிறார்.

கார்த்திக் நேத்தா எழுதியுள்ள வரிகளும் அதிகம் கவரும் வகையிலேயே இருக்கிறது. இந்த நான்கரை நிமிட பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதோ..


பாடலின் துவக்கத்தில் விஜய் சேதுபதி பேசுவது போல ஒரு வசனமும் இடம் பெற்றிருக்கிறது. "எங்கேயோ இருந்து வந்த ஒருவன், நம்மை ஏமாற்றி.. நம்ம இடத்தை பிடிச்சு.. நம்ம தலை மேல ஏறி உட்காருகிற வரைக்கும் எல்லாமே தன்னாலே சரியாகி விடும் என சும்மாவே இருந்திருக்கோம்.. துரு புடிச்சது போல.

நம்மளோட உரிமை என்பது இன்னொருத்தன் கிட்ட கேக்குற பச்சை கிடையாது. அது நம்மளோட இயல்பு. நம்மளோட உரிமையை தடுக்கணும்னு நெனச்சா அவன் மூஞ்ச விட்டுட்டு மூளையை அடிச்சு உடைக்கணும். அப்போதும் அடுத்து வருபவனுக்கும் அப்படி யோசிக்கணும் என்கிற எண்ணம் கூட வராது" என பேசுகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து தான் பாடல் துவங்குகிறது.

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி உடன் மஞ்சிமா மோகன், அதிதி ராவ் ஆகியோர் நடித்து உள்ளனர். மஞ்சிமா விஜய் சேதுபதியின் தங்கையாக இதில் நடித்து உள்ளார். மேலும் காமெடியன் கருணாகரன் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். இதுவரை சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஷூட்டிங் நிறைவு பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்