ஆப்நகரம்

இப்போ நம்மால பண்ண முடியுமா? ட்ராப் ஆன படத்தை மீண்டும் துவங்க விரும்பும் ரஜினி!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த ராணா படத்தின் கதையை மீண்டும் சொல்லுங்கள் என ரஜினி சமீபத்தில் கேட்டு இருக்கிறார்.

Samayam Tamil 23 Sep 2020, 9:33 am
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது பல இயக்குனர்களின் கனவாகவே இருக்கும். தற்போது சினிமாவில் அதிகம் ரசிகர்களை கவர்ந்த வரும் இளம் இயக்குநர்களுக்கு போன் செய்து தனக்கு ஒரு கதை தயார் செய்யுங்கள் என ரஜினிகாந்த் சொல்வதும் உண்டு. பல முன்னணி இயக்குனர்கள் ரஜினியின் பட வாய்ப்புக்காக காத்திருப்பதும் அனைவரும் அறிந்தது தான். இது ஒருபுறமிருக்க முத்து, படையப்பா உள்ளிட்ட ரஜினியின் படங்களை இயக்கியிருக்கும் கே. எஸ். ரவிக்குமார் தற்போது ஒரு சூப்பரான தகவலை கூறி இருக்கிறார்.
Samayam Tamil Rajinikanth


கடந்த 2011 ரஜினி நடிப்பில் ராணா என்ற படத்தினை அறிவித்தார் கே.எஸ்.ரவிக்குமார். இந்த பிரம்மாண்ட படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஷுட்டிங் துவங்கிய முதல் நாளிலேயே ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அதை நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக சென்று விட்டார். அதனால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்த படம் இது என்பதால் அதன் ஷூட்டிங் மீண்டும் துவங்க வாய்ப்பு இருக்கிறதா என அதிகம் பேர் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது பற்றி கே.எஸ்.ரவிக்குமார் தற்போது பேசியிருக்கிறார். "எந்திரன் மற்றும் தசாவதாரம் படங்களுக்குப் பிறகு ராணா படம் தான் ரஜினி சார் மற்றும் எனக்கு மிகப்பெரிய படமாக இருக்கும் என கருதப்பட்டது. இது வரலாற்று படம் என்பதால் அதில் பல விஷயங்கள் முயற்சிக்க இருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின் கோச்சடையான் படத்தில் இணைந்து பணியாற்றினோம். அது ராணா படத்தின் முந்தைய கதை (Prequel) அது என்று கூட சொல்லலாம். அதன் கதையும் சிறப்பாக இருந்தது. ரஜினி சார் சிகிச்சையிலிருந்து அப்போது தான் திரும்பினார் என்பதால் அவர் மீது அதிக பிரஷர் கொடுக்கவில்லை."

"தற்போதும் நான் ராணா படத்தின் கதையை அடிக்கடி பார்ப்பேன் - அது ரஜினி சாரின் கதை, நான் அதற்கு திரைக்கதை எழுதி இருந்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்து ரஜினிகாந்த் மீண்டும் அந்த கதையை சொல்லும்படி கேட்டார். அதைக் கேட்ட பிறகு 'இப்போ நம்மால் பண்ண முடியுமா?' என கேட்டார். முடியுமென நான் சொன்னேன். அவர் மனதில் அரசியல் இருக்கிறது என்பதால் இந்த படத்திற்கு தேவைப்படும் அளவு அதிக நேரம் ஒதுக்கி நடிக்க முடியுமா என அவர் கேட்டார்."

"ரஜினி பண்ணா நல்லா இருக்கும். ஆனால் ராணா கதை வருங்காலத்தில் என்ன ஆகும் என்பது எனக்கு தெரியவில்லை" என கே.எஸ்சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்திற்கு பிறகு சிவா இயக்கும் படம் இது என்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் குடும்ப சென்டிமென்ட் அதிகம் வைத்து இந்த படத்தின் கதை இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹைதராபாத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் ஷூட்டிங் மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்