ஆப்நகரம்

கன்னட சூப்பர்ஸ்டார் படத்தில் யோகி பாபு? வைரல் புகைப்படம்

நடிகர் யோகி பாபு அடுத்து கன்னட சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 20 Aug 2020, 9:48 am
சந்தேகமே மில்லாமல் தற்சமயம் கோலிவுட்டின் முன்னணி காமெடியன் என்றால் அது யோகி பாபு தான். ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட் படங்கள் தொடங்கி, சிறிய பட்ஜெட் படங்கள் வரை அவர் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.
Samayam Tamil Yogi Babu


ஏற்கனவே யோகி பாபு ஷாருக் கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார், மேலும் தெலுங்கிலும் ஒரு படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது கன்னட சினிமாவில் யோகி பாபு அறிமுகமாக உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

யோகி பாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. அதனால் அவர் கன்னட சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க உள்ளாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அது மட்டுமின்றி சீனியர் நடிகரான சிவராஜ்குமார் உடன் பஜரங்கி 2 படத்தின் சூட்டிங் செட்டில் இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.


இந்த புகைப்படம் எதிர்பார்ப்பை அதிக அளவு கூட்டியிருக்கிறது. 2003ல் வெளிவந்த பஜரங்கி படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம். சிவராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமார் உடன் யோகி பாபு இருக்கும் இரண்டு புகைப்படங்களும் அதிகமாக வைரலாகி இருக்கிறது. மேலும் யோகிபாபு சிவராஜ் குமாருக்கு மாலை, சால்வை ஆகியவற்றை அணிவித்து பெருமைப் படுத்தியிருக்கிறார். அதன் பிறகு நடிகை துணியா விஜய்யையும் யோகி பாபு சந்தித்துப் பேசியிருக்கிறார்.

யோகி பாபு தற்போது தமிழில் பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக காக்டெயில் என்ற படம் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளியானது. அதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதில் யோகி பாபு கதாபாத்திரம் தான் அதிக முக்கியத்துவம் இருந்தது. மேலும் யோகி பாபு கைவசம் பன்னிகுட்டி, கடைசி விவசாயி அடங்காதே உள்ளிட்ட பல படங்களை வைத்திருக்கிறார். அவர் நடித்து வரும் படங்கள் கொரோனா காரணமாக தடைபட்டு இருக்கின்றன. மேலும் தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் இவர் நடித்து முடித்துள்ள பல்வேறு படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன என்பதும் குறிபிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் யோகி பாபு புகைப்படத்துடன் தெளலத் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தனக்கும் அந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என யோகி பாபு கூறி இருந்தது தான் சர்ச்சைக்கு காரணம்.

"நான் 2 அல்லது 3 சீன்களில் நடித்திருக்கும் படங்களில் கூட என்னை சோலோவாக போஸ்டரில் வைத்து வெளியிடுகிறார்கள். தயவு செய்து அப்படி பண்ணாதீர்கள். வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் யாருமே இதை செய்யாதீர்கள். எனக்கு என்று பார்க்க ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். அவர்கள் அதை பார்த்து ஏமாந்து போகிறார்கள். அதனால் என்னை உண்மையிலேயே முக்கிய ரோலில் வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்க படுகிறார்கள்" என யோகி பாபு கூறி இருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்