ஆப்நகரம்

வீட்டில் தனியாக இருந்த நடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்

கொல்கத்தாவில் தனியாக வசித்து வரும் இளம் நடிகை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

Samayam Tamil 12 Jul 2020, 12:13 pm
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 26 வயது பெண் மாடல் அழகியாகவும், நடிகையாகவும் இருக்கிறார். அவர் கொல்கத்தாவில் இருக்கும் பிஜோய்கார் பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 5ம் தேதி நடிகைக்கு தெரிந்த ஒருவர் அவரின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
Samayam Tamil sexual assault


பண உதவி கேட்டு வந்த அந்த நபர் நடிகை வீட்டில் தனியாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த கொடூர சம்பவத்தை அந்த நபர் தன் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று அந்த நபர் மிரட்டியிருக்கிறார்.

நடிகை அந்த மிரட்டலையும் தாண்டி ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் அந்த நபர் மீது தைரியமாக புகார் அளித்தார். மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாதியா பகுதியை சேர்ந்த அந்த நடிகை நடிக்க வசதியாக கொல்கத்தாவில் வீடு எடுத்து தங்கியிருக்கிறார். அவர் சாத் பாய் சம்பா பெங்காலி தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.

நடிகையை பலாத்காரம் செய்த நபருக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக சரியான பேச்சுவார்த்தை இல்லையாம். லாக்டவுன் நேரத்தில் அந்த நபர் நடிகையை ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். நடிகை அவரை சந்திக்க மறுத்திருக்கிறார்.

தனக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பணக் கஷ்டமாக இருக்கிறது, கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்யுங்கள் என்று அந்த நபர் நடிகையிடம் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார். நடிகை சந்திக்க மறுத்தும் அந்த நபர் கடந்த 5ம் தேதி வந்திருக்கிறார். நடிகையும் பழகிய தோஷத்திற்காக அவரை வீட்டிற்குள் அனுமதித்திருக்கிறார்.

முதலில் ஒழுங்காக பேசியவர் பின்னர் மோசமாக நடந்து கொண்டாராம். வீட்டில் தனியாக இருந்த நடிகை ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் ஒருவர் உதவி கேட்க சென்ற இடத்தில் நடிகை தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது மக்களை கோபம் அடைய வைத்துள்ளது. அந்த நபருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் பலரும் நடிகையின் தைரியத்தை பாராட்டியுள்ளனர். வளர்ந்து வரும் நடிகையாக இருப்பினும் தன் பெயர் கெட்டுவிடுமே என்று பயந்து தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் இருக்காமல், தைரியமாக போலீசில் புகார் கொடுத்தது பாராட்டுக்குரியது. பெண்களுக்கு எதிரான இது போன்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளியே இல்லையா?. ஒரு பெண் தனியாக வசிப்பது ஒரு குற்றமா?. சிறுமியாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை, இளம் பெண்ணாக இருந்தாலும், வயதானவராக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை.

பெண்ணாக பிறப்பதே பிரச்சனையாகிவிட்டதே என்று சில பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களின் மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்