ஆப்நகரம்

சுரேஷ் சக்ரவர்த்தி ஸ்கூல் படிக்கும் போதே எனக்கு தெரியும்: தெரியாத பல விஷயங்களை கூறிய நடிகை

பிக் பாஸ் போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி பற்றி பல விஷயங்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Samayam Tamil 16 Oct 2020, 11:25 am
பிக் பாஸ் 4 வீட்டில் தற்போது ட்ரெண்டிங் போட்டியாளராக இருப்பவர் சுரேஷ் சக்ரவர்த்தி. அவர் தான் இந்த 4வது பிக் பாஸ் சீசனின் டிஆர்பி புல்லர் என ரசிகர்கள் அனைவரும் தெரிவித்து வருகிறார்கள்.
Samayam Tamil Suresh Chakravarthy (Pic Credits: Hotstar)


சுரேஷ் சக்ரவர்த்தி செய்யும் ஒவ்வொரு விஷயமும் பிக் பாஸ் வீட்டில் பல சிக்கல்களை ஏற்படுத்தினாலும், அதனால் மட்டுமே நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கிறது என்றும், அவர் இல்லை என்றால் போட்டியாளர்கள் 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என இருந்திருப்பார்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி முதல் வாரத்தில் தான் கடந்து வந்த பாதை பற்றி கூறி இருந்தார். அவர் இங்கு சினிமாவில் பணியாற்றி அதன் பின் துபாய்க்கு சென்று ஹோட்டல் நடத்தியது, அது நஷ்டம் ஆனதால் அதன் பிறகு இந்தியா திரும்பி சன் டிவியில் பணியாற்றியது, மற்றும் அதன் பிறகு ஆஸ்திரேலியா சென்று ஹோட்டல் தொழில் தொடங்கி செட்டில் ஆனது என அனைத்தையும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகை ஸ்ரீப்ரியா ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு சுரேஷ் சக்ரவர்த்தி சின்ன பையனாக இருக்கும்போது இருந்தே தெரியும் என தெரிவித்து உள்ளார். ஸ்ரீப்ரியாவின் அக்காவிடம் தான் சுரேஷ் சக்ரவர்த்தி பரதநாட்டியம் கற்க வருவாராம்.

"சுரேஷ் சின்ன பையனாக இருக்கும் போதிருந்தே தெரியும். என் வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் தான் அவர் படித்து கொண்டிருந்தார். ரொம்ப நல்ல மனிதன். சின்ன வயதிலேயே அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். என் அக்கா அவருக்கு ரொம்ப கிளோஸ், ஒரு அம்மா மாதிரி என சொல்லலாம். நல்ல வசதியானவர் தான், ஆனால் அவரது பெற்றோர் இறந்துவிட்டதனால் அவர் வாழ்க்கையில் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறார். அதிகம் திறமை கொண்டவர். அவர் படித்த பள்ளியில் கேப்டனாகவும் இருந்திருக்கிறார். நன்றாக படிப்பார்."

"பிக் பாஸ் வருவதற்கு சுரேஷ் என்ன சாதித்துவிட்டார் என சிலர் பேசுகிறார்கள். அவரை பற்றி நன்றாக தெரியும் என்பதால் நான் இதை சொல்கிறேன். அவர் சினிமாவில் பலரை promote செய்திருக்கிறார். அவர்கள் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. நன்றாக எழுதுவார், பல படங்களுக்கு எழுதியுள்ளார். எதுவும் பண்ணவில்லை என்றால் கூட பிக் பாஸ் வரலாம். அங்கு வந்து கூட சாதனையாளராக மாறலாம்" என ஸ்ரீப்ரியா தெரிவித்து உள்ளார்.

"சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் 4 துவக்க நிகழ்ச்சியில் 'கமல்ஹாசனை பார்த்ததே பெரிய வெற்றி தான், நான் இப்படியே போகிறேன்' என சொன்னது பொய் என சொல்கிறார்கள். கட்சியில் இருக்கும் நானே கமலை பார்த்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. சுரேஷ் எப்படி பார்த்திருப்பார்" என்று ஸ்ரீப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு நடந்த 'எவிக்ஷன் ஃபிரீ பாஸ்' டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் பேசுவதை வெளியில் டிவியில் காட்டாத பிக் பாஸ், ஏன் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியதை மட்டும் மற்ற போட்டியாளர்கள் பார்க்கும் வகையில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார் ஸ்ரீப்ரியா.

அடுத்த செய்தி