ஆப்நகரம்

பாரதிராஜா, இளையராஜா யார் என்று கூட அப்போ தெரியாது.. கடலோர கவிதைகள் பற்றி ரேகா உருக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நாளில் கடலோர கவிதைகள் ரேகா, சினிமாவில் தான் சந்தித்த விஷயங்களை பிக் பாஸ் மேடையில் அனைத்து போட்டியாளர் முன்பும் பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 8 Oct 2020, 9:58 am
விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக சக்கைபோடு போட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மூன்று நாட்கள் முன்பு தொடங்கியது. வழக்கம் போல இந்த ஆண்டும் உலகநாயகன் கமல் ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தொலைக்காட்சி பிரபலம் மற்றும் நடிகர் ரியோ ராஜ், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ரேகா போன்ற 16 போட்டியாளர்களுடன் இந்த ஆண்டு பிக் பாஸ் அமோகமாக தொடங்கியுள்ளது.
Samayam Tamil rekha talks about her career in bigg boss 4 tamil
பாரதிராஜா, இளையராஜா யார் என்று கூட அப்போ தெரியாது.. கடலோர கவிதைகள் பற்றி ரேகா உருக்கம்



கடந்து வந்த பாதை

பிக் பாஸ் வீட்டின் முதல் நாளில் இந்த வாரத்திற்கான தலைவராக நடிகை ரம்யா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களையும் தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறுமாறு கேட்டுக்கொண்டார். முதலில் பாடகர் வேல்முருகன் தான் சந்தித்த துன்பங்கள் பற்றி அனைத்து போட்டியாளர்களும் முன்பும் வேதனையுடன் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ரேகா, நான் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் எப்படியாவது ஒரு படம் நடித்து சாதித்துவிட வேண்டும் என்று எண்ணி இருந்த சமயத்தில் என்னுடைய குரு கலைமணி சார் அவர்கள் இயக்குனர் பாரதிராஜா அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். சினிமாவைப் பற்றி அதிகம் அறிந்திராத எனக்கு, பாரதிராஜா யார் என்று கூட முதலில் தெரியவில்லை.

இயக்குனர் பாரதிராஜா முதலில் என்னிடம், நான் பார்த்த படங்கள் பற்றி கூறும்படி கேட்டார். ஆனால் நான் படங்கள் ஏதும் பார்த்ததில்லை என்று கூறிவிட்டேன். அதைத் தொடர்ந்து உனக்கு இளையராஜா தெரியுமா என்று கேட்டார். அதற்கு எனக்கு இளையராஜாவும் தெரியாது என்றும், இந்த சினிமா குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் பதிலளித்தேன்.

முதல் பட வாய்ப்பு

அதைத் தொடர்ந்து அவர் என்னிடம் எறும்பு போகிறதா பார் என்று கூறினார். அதற்கு நான் எரும்பு ஏதும் செல்லவில்லை என்றேன். உடனே அவர் என்னிடம் எறும்பு போகிற மாதிரி பார்க்க சொன்னார். நானும் அவ்வாறு பார்த்தேன். அதையடுத்து பாரதிராஜா என்னிடம் நாளை மறுநாள் நாம் விசாகப்பட்டினம் செல்ல இருக்கிறோம் என்று கூறி என்னிடம் ஒரு அட்வான்ஸ் தொகையை கொடுத்தார்.

அவருடன் ஒன்றும் தெரியாமலேயே சினிமாவில் முதல் படம் நடித்து முடித்தேன் என்று போட்டியாளர்கள் முன்பு ரேகா தெரிவித்தார்.

மேலும் அவர், எல்லாருக்கும் எல்லாம் அமைந்து விடாது என்றும் இசைஞானி இளையராஜாவின் இசையில் மட்டும் 40 படங்கள் செய்துள்ளேன் என்று பெருமிதம் கொண்டார். என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் நானே பார்த்து பார்த்து எடுத்து வைத்ததாகவும், யாருமே என்னுடைய வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவிகள் செய்யவில்லை என்று கூறினார்.

மிகவும் பிடித்த கடலை உருண்டை

உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து குணா படம் செய்து கொண்டிருந்த சமயத்தில் அவருடைய ப்ரோடக்ஷனில் இருந்து பெரிய கடலை உருண்டை வந்ததாகவும், அது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றும் பழைய நினைவுகளை போட்டியாளர்களுடன் பகிர்ந்தார். மேலும் அந்த கடலை உருண்டையை தற்போது பிக்பாஸ் வீட்டில் அனுப்பும்படி கேட்டுக் கொண்ட ரேகா, அதனை நிஷாவிற்கு மட்டும் வழங்கக் கூடாது என்று நக்கலாக கூறினார் ரேகா.

அடுத்த செய்தி