ஆப்நகரம்

பாஜக-வில் இணையும் நடிகை ப்ரியா ராமன்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘செம்பருத்தி’ தொடரில் நடித்து வரும் நடிகை ப்ரியா ராமன் விரைவில் பாஜக-வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Samayam Tamil 26 Jul 2019, 8:21 pm
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதில், பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
Samayam Tamil Boats


எனினும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் மாபெரும் வெற்றியை பெற்றாலும், பாஜக அதிமுக கூட்டணிக்கு தமிழகத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே கிடைத்தது. கேரளாவிலும் பாஜக-வுக்கு பிரகாசமான வெற்றி அமையவில்லை.

இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கான அடிப்படை பணிகளை முடுக்கிவிட, மாநில தலைமைக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனையடுத்து வரும் தேர்தல்களில் பாஜகவை வலுப்படுத்த தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையில் பாஜக பொறுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிச சௌந்திரராஜன், எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தவிர, தமிழக பாஜக-வில் தொலைக்காட்சி, சினிமா என முக்கிய பிரபலங்களையும் சேர்க்கும் பணிகள் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் பிரபல தொலைக்காட்சி நடிகை பிரியா ராமன், பாஜக-வில் இணையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ரஜினிகாந்த் தயாரித்து நடித்த வள்ளி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான ப்ரியா ராமன், மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். பிறகு திரைப்பட நடிகர் ரஞ்சித்தை திருமணம் செய்து கொண்ட அவர், குடும்ப வாழ்க்கையில் பிசியானார்.

பிள்ளைகள் வளர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் நடிக்க முடிவு செய்த பிரியா ஆனந்த் தொலைக்காட்சி சீரியலில் நடித்தார். ஜி தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடரில் அவருடைய அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதை கவனித்த தமிழக பாஜக, அவரை கட்சிக்குள் இழுக்க ஆர்வம் காட்டி வருகிறது. முன்னதாக, பிரியா ஆனந்தின் கணவர் ரஞ்சித் பாமக-வில் இணைந்து பிறகு அங்கியிருந்து வெளியேறி டிடிவி தினகரனின் அமமுக-வில் இணைந்துள்ளார்.

தற்போது ரஞ்சித்தின் மனைவி ப்ரியா ராமன் பாஜக-வில் இணைவது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுதொடர்பாக இருதரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி