ஆப்நகரம்

தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் பிரபல சீரியல் இயக்குநர்: உதவ முன்வந்த நடிகர்

பிரபல தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் காய்கறி வியாபாரம் செய்து வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Samayam Tamil 30 Sep 2020, 8:36 am
கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதும் ஏற்பட்டது பலர் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். சாதாரண மக்கள் மட்டும் அல்ல சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் கலைஞர்கள், இயக்குநர்கள் என்று பலர் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
Samayam Tamil balika vadhu


இந்தியில் பிரபலமான பாலிகா வது தொடரை இயக்கியவர்களில் ஒருவர் ராம் வ்ரிக்ஷா கவுர். கொரோனா வைரஸ் பிரச்சனையால் அவர் வேலை இல்லாமல் இருக்கிறார். எப்பொழுது வேலை கிடைப்பது என்று நினைத்து அவர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆசம்கரில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கிறார்.

கவுர் சாலையோரம் காய்கறி விற்பதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் காய்கறி விற்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அடப்பாவி, ஒரு இயக்குநர் இப்படி தெருவுக்கு வந்துவிட்டாரே என்று பலரும் பரிதாபப்படுகிறார்கள்.

பாலிகா வது தொடரில் பைரோன் தரம்வீர் சிங் கதாபாத்திரத்தில் நடித்த அனுப் சோனியும் அதிர்ச்சி அடைந்துள்ளார். கவுர் பற்றி அனுப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இது கவலை அளிக்கிறது. பாலிகா வது குழுவுக்கு இது குறித்து தெரிய வந்து அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளது என்றார்.

கவுர் பற்றி அனுப் சோனி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

கவுர் செகண்ட் யூனிட் டைரக்டராக வேலை பார்த்ததால் அவரை பலருக்கும் தெரியாது. பாலிகா வது குழு அவருக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. அவருக்கு மும்பையில் சொந்தமாக வீடு இருக்கிறது. அவர் மிகவும் பாசிட்டிவானவர், சுயமரியாதை உள்ளவர்.

கவுரின் வங்கி கணக்கு விபரத்தை பெற பாலிகா வது குழு முயன்று வருகிறது. வங்கி கணக்கு விபரம் கிடைத்தவுடன் நாங்கள் அனைவரும் பணம் அனுப்பி வைப்போம்.

எங்களால் பண உதவி தான் செய்ய முடியும். நான் ஒரு நடிகர். என்னால் அவருக்கு இயக்குநர் வேலை வாங்கித் தர முடியாது. கவுருடன் வேலை செய்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அவருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றார்.

போஜ்புரி படம் ஒன்றை இயக்குவதற்காக கவுர் ஆசம்கருக்கு சென்றிருக்கிறார். அவர் ஆசம்கரில் இருந்தபோது லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதனால் அவரால் மும்பைக்கு திரும்ப முடியவில்லை. போஜ்புரி படமும் நிறுத்தப்பட்டது. படத்தை மீண்டும் துவங்க ஓராண்டு ஆகும் என்று தயாரிப்பாளர் கூறிவிட்டார். இதையடுத்து தான் தன் தந்தை வழியில் தள்ளு வண்டியில் காய்கறி விற்பது என்று முடிவு செய்திருக்கிறார். காய்கறி விற்பனை செய்வதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கவுர் தெரிவித்துள்ளார்.

செலவுக்கு பணம் இல்லாமல் ராக்கி விற்கும் பிரபல நடிகை

அடுத்த செய்தி