ஆப்நகரம்

வடிவேல் பாலாஜி யாரென்றே எனக்கு தெரியாது.. சர்ச்சை ஏற்படுத்தாதீங்க: வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு வடிவேல் பாலாஜி யாரென்றே தெரியாது என கூறி இருப்பதற்கு நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

Samayam Tamil 12 Sep 2020, 6:58 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது, கலக்கப் போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கிய வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றது. டிவி பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க அவருக்கு இறுதியாக விடை கொடுத்தனர்.
Samayam Tamil Vadivel Balaji, Vanitha


வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கில் பிரபலங்கள் பலரும் கண்ணீர் விட்டனர். நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் பண உதவி கொடுத்துள்ளார் அவர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் மிக உருக்கமாக வடிவேல் பாலாஜி பற்றி பேசி இருந்தார். வடிவேல் பாலாஜியின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில் தனக்கு வடிவேல் பாலாஜி யார் என்றே தெரியாது என கூறி இருக்கிறார். அதனால் அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். வடிவேல் பாலாஜி இறப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் வனிதா, "எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் யாரென்று எனக்கு தெரியாது, அவரை சந்தித்ததும் இல்லை, உடன் பணியாற்றியதும் இல்லை. அவர் சிறந்த திறமை கொண்டவர் என சொல்கிறார்கள். இந்த துயரத்தை சந்தித்து வரும் அவரது குடும்பத்தினருக்காக நான் இதயப்பூர்வமாக வருந்துகிறேன்" என கூறி உள்ளார்.


டிவி பார்க்கும் அனைவருக்கும் அவரை பற்றி தெரிந்திருக்கும் உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது என நெட்டிசன் ஒருவர் கேட்டதற்கு பதில் கூறிய வனிதா, "கடவுள் மீது ஆணையாக சொல்கிறேன், நான் அவரது ஷோக்களை நான் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. நான் ஜட்ஜாக இருப்பதால் KPY ஷோவை நான் தற்போது தான் பார்த்து வருகிறேன். அப்போதும் சரி, இப்போதும் சரி அவர் என்னுடன் நடிக்கவே அல்லது பணியாற்றவோ இல்லை.


எதுவமே தெரியாமல் ஜட்ஜாக இருப்பது சரியா ஒருவர் கேட்டதற்கு, "ஒரு ஷோவின் பங்கேற்க அதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கூக் வித் கோமாளி முதல் சீசன் எனக்கு புது அனுபவமாக இருந்தது. நான் ஜெயித்தேன். அது என் profession.. ஒரு நிகழ்ச்சியை ஜட்ஜ் செய்வது இதற்கு முந்தைய எபிசோடுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் திரைப்படங்கள் அதிகம் பார்த்த அனுபவம் உள்ளவள். ஒருவர் இறந்துவிட்டார். புது சர்ச்சையை ஏற்படுத்தாதீங்க.. அவரது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என வனிதா கூறி இருக்கிறார்.


ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவரது திறமையை மதித்து அதற்கு தகுந்த அதிக வாய்ப்புகள் தர வேண்டும், இறந்தபிறகு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பது மட்டும் போதாது. அவர் ஒரு family மேன், அவர் இவ்வளவு விரைவில் சென்றிருக்க கூடாது எனவும் வனிதா கூறி இருக்கிறார்.


வனிதா இப்படி கூறியிருப்பதற்க்கு நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி