ஆப்நகரம்

டிராக்டர் மீது கார் மோதி விபத்து: 22 வயது டிவி நடிகை பலி

கன்னட தொலைக்காட்சி நடிகை மெபீனா மைக்கேல் சாலை விபத்தில் பலியானார். அவருக்கு வயது 22.

Samayam Tamil 27 May 2020, 2:47 pm
கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிக்கேரியை சேர்ந்தவர் மெபீனா மைக்கேல். அவர் கன்னட டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியான Pyaate Hudugir Halli Life-ல் கலந்து கொண்டு பிரபலமானார். அவர் தன் தோழிகளுடன் காரில் தன் சொந்த ஊருக்கு நேற்று மாலை சென்றுள்ளார்.
Samayam Tamil mebeina michael


நாகமங்களா தாலுகாவில் இருக்கும் தேவிஹல்லி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரின் கார் ஒரு டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை உடனே அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மெபீனா உயிர் இழந்தார். அவருடன் பயணம் செய்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மெபீனா இறந்த செய்தி அறிந்த கன்னட சின்னத்திரை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மெபீனா மைக்கேலின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக அவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த Pyaate Hudugir Halli Life நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்ட மெபீனா மைக்கேல் தான் வெற்றி பெற்றார். அந்த நிகழ்ச்சி ஹாஸன் அருகே இருக்கும் பனவாசி கிராமத்தில் நடந்தது.

மெபீனாவின் மரணம் குறித்து அறிந்த Pyaate Hudugir Halli Life நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் அகுல் பாலாஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். மெபீனா பற்றி அகுல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பிஹெச்ஹெச்எல் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் எனக்கு பிடித்த போட்டியாளரும், வெற்றியாளருமான மெபீனா திடீர் என்று இறந்து செய்தி அறிந்து அதிர்ச்சியாக உள்ளது. ரொம்ப சின்ன வயது. இந்த தவலை ஜீரணிக்கவே முடியவில்லை. அவரின் குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அகுல் பாலாஜியின் ட்வீட்டை பார்த்த அந்த நிகழ்ச்சியின் ரசிகர்களும் போகும் வயதா இது, மெபீனாவுக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்கக் கூடாது. அவர் குடும்பத்தாரை நினைத்து தான் கவலையாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

மெபீனா பற்றி சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

என்ன நாள் இது. காலையில் தான் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ப்ரெக்ஷா மேத்தா கொரோனா லாக்டவுனால் வேலை இல்லை என்று மன அழுத்தம் தாங்க முடியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தியை பார்த்தோம். 25 வயதில் ப்ரெக்ஷா இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாரே என்று வருத்தப்பட்டோம்.

அந்த செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்கும் முன்பு 22 வயது மெபீனா மைக்கேல் கார் விபத்தில் பலி என்கிற செய்தி வெளியாகியுள்ளது. இது என்ன சின்னத்திரைக்கு சோதனையான காலமோ. ஏதாவது மரண செய்தி வந்து கொண்டே இருக்கிறதே. 2020ம் ஆண்டு எந்த நேரத்தில் துவங்கியது என்றே தெரியவில்லை. அடுத்தடுத்து ஏதாவது நடக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும் என்றே தெரியவில்லை. இந்த கொரோனா லாக்டவுன் முடிவதற்கு எத்தனை உயிர் போகப் போகிறதோ என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி