மலேரியா என்றால் என்ன?
பொதுவாக உங்களுக்கு எல்லாம் தெரிந்தது போலவே மலேரியா என்பது கொசுக்களால் ஏற்படக்கூடிய ஒரு நோய்தான். ஆனால், எல்லா கொசுக்களும் மலேரியா ஏற்பட காரணமாக இருப்பது இல்லை. அதற்கு அர்த்தம் சில கொசுக்கள் நல்ல கொசுக்கள் என்பது அல்ல. பிளாஸ்மோடியம் என்று சொல்லகூடிய ஒட்டுண்ணி பெண் அனோபிலிஸ் கொசுக்களை பாதிக்கிறது. இந்த பாதிக்கப்பட்ட கொசு நேராக உங்களை வந்து கடிப்பதன் மூலம் அதன் தொற்று உங்கள் ரத்தத்திற்குள் பரவி மலேரியா நோயை ஏற்படுத்துகிறது. இதில் நான்கு விதமான மலேரியா நோய்களும் உள்ளது. ஆனால், இந்த நோய் மனிதருக்கு மனிதர் நேரடியாக பரவாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த நோய் அதிகமாக வெப்ப மண்டல பகுதிகளான ஆப்ரிக்கா மற்றும் ஆசியா நாடுகளையே பாதித்துள்ளது.
மலேரியா தின வரலாறு..
முதன் முதலில் 2007ம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று உலக சுகாதார நிறுவன கூட்டத்தில் அந்த நாளை உலக சுகாதார நாளாக கடைபிடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதிலிருந்து 2008ம் ஆண்டு ஏப்ரல் 25 முதல் முதலாக உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைப்பில் பெரிய இலக்கோடு மலேரியாவை இவ்வுலகில் இருந்து ஒழிக்கும் நோக்கத்தில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மலேரியா குறித்தான விழிப்புணர்வு நிகழ்வுகள், மருத்துவ முகாம்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் போன்றவை செய்யப்படும்.
Guru peyarchi Palan : வடிவேலு வெர்சனில் குருபெயர்ச்சி பலன்கள்.. இணையத்தில் ட்ரெண்டாகும் குருபெயர்ச்சி மீம்ஸ்..உலக மலேரியா தினம் 2023..
2023ம் ஆண்டு உலக மலேரியா தினத்தை முன்னிட்டு “மலேரியா இன்மையை வழங்கும் நேரம் : முதலீடு, புதுமை, செயல்படுத்துதல்” (“Time to deliver zero malaria: invest, innovate, implement”) என்ற தலைப்பில் கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் இந்த குறிக்கோளோடு செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டுகளை தரவுகளை பார்த்தால் ஓரளவு நேர்மறை முடிவுகளை நோக்கியே உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், வளர்ந்து நாடுகளின் அளவிற்கு வளர்ந்து வரும் நாடுகளோ அல்லது மூன்றாம் கட்ட நாடுகளோ மலேரியா போன்ற நோய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பதில்லை. இதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் இன்றும் இறந்து கொண்டிருக்கின்றனர்.
லட்சங்களில் உயிரிழப்பு..
2022 வெளியிடப்பட்ட உலக அறிக்கையின்படி 2021ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 6,19,000 மக்கள் மலேரியா பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். ஆனால், இது 2020 எண்ணிக்கையான 6,25,000த்தோடு 6000 குறைவு. அதே சமயம் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டு 245மில்லியனாக இருந்த புதிய பாதிப்பு , 2021ம் ஆண்டில் 247 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் ஆப்ரிக்க கண்டம்தான் இதில் 95% பாதிப்பு எண்ணிக்கையையும், 96% (593 000)உயிரிழப்பு எண்ணிக்கையும் கொண்டுள்ளது என்பது பெரும் சோகம்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களில் பெரும்பான்மையானோர் எந்த வித அடிப்படை வாழ்வாதாரமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை மக்கள். சுத்தம் சுகாதாரம் என்று அவர்களுக்கு அறிவுரைகள் சொல்வதை தாண்டி அவர்களுக்கான உள்ளடக்கிய(Inclusive) பாலிசியை அரசு திட்டமிட வேண்டும். அவர்களது வாழ்வாதாரம், சுகாதாரம், வசிப்பிடம் என எல்லாவற்றையும் உயர்த்துவதன் மூலமே ஜீரோ மலேரியா என்ற நிலையை எட்ட முடியும். நாட்டு மக்கள் அதை நோக்கிய கோரிக்கையை அரசை நோக்கி அழுத்தமாக வைத்தால் மட்டுமே இதற்கான தீர்வை எட்ட முடியும். அதே சமயம், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சுகாதார நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.